Saturday 8 October 2011

அழகே அழகே



ஒட்டுமொத்த உயிரும் ஆடிப்போக
வெட்டிவிட்டுப் போனது மின்னலென
மொட்டுவிட்டதொரு நந்தவனம்
எட்டநின்று பார்த்தபோதே குரங்கென
குட்டிக் கரணம் போட்டது மனம்

நிலவை வென்ற முகமழகு
பிறையை ஒத்த நுதலழகு
புருவம் காட்டும் வில்லழகு – அந்த
விழிகள் வீசிய வேலும் அழகு

செக்கச் சிவந்த ஆப்பில் போலும் கன்னம்
செவ்வாயில் கொவ்வை போலும் வண்ணம்
சுடாமலே வெண்மை கொண்ட சங்காம்
சுட்டுவிழிக்காரி அவள் கழுத்து

எறிக்கும் நிலவில் ஒருதுளி எடுத்து
செதுக்கிய தேகம் சிற்பமோ
உயிரைப்பறிக்கும் மெல்லிடை தன்னில்
உரசும் பின்னல் சர்ப்பமோ

அந்திவானில் கூடப் பார்த்ததில்லை
இந்த மேனி நிறத்தை – முந்தி வந்த
கனவுகளில் வந்து போன தேவதைகள்
மிச்சம்விட்ட குறையெல்லாம் மொத்தமென கண்டேன்
அழகே அழகே அது இவளே இவளென்று

No comments:

Post a Comment