Wednesday 21 June 2017

ஆறுவது சிரமம்






நினைத்துப் பார்க்கின்றேன்
என்னோடு நீயிருந்த நாட்களை

ரீங்காரமிட்டு பறக்கின்றன
சில்வண்டுகள் எல்லாம்
என்னைச் சுற்றி

உறுண்டு வந்து உண்மைகள்
உறுத்துகின்றன மீண்டும்
உதிர்ந்து போகிறேன் பூக்களென
அடுத்த நொடியே

இப்படியெல்லாம் நடக்கும் என்று
இருந்திருந்தால்...
அன்று
அப்படியெல்லாம் எதுவும்
நடந்திருக்க வேண்டாமே

அப்போது அப்படியும்
இப்போது இப்படியும்
காலங்கள் மாறியதால்

கனந்து கொண்டிருக்கிறது
எனக்குள் இன்னும்
ஞாபகக் குப்பைகள்

எனக்காகப் பிறந்தவள் நீயென்று
எழுதிக்கூட தந்தாயே...
சாவேன் உனக்கேதும் என்றால்
என்று
சத்தியமும் செய்தாயே...

வழக்கா போட முடியும்
உன் மீது
வார்த்தை தவறிவிட்டாய் என

போனது தான் போனாய்
பொல்லாத உன் நினைவுகளை மட்டும்
ஏனடி விட்டுப் போனாய்

வற்றிப்போன குளத்தையும்
பட்டுப்போன மரத்தையும்
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்
என்னோடு

உயிர் விட்டுப்போகவில்லை இன்னும்
ஆனால்
நான் செத்துப்போனேன்.



Wednesday 3 May 2017

அக்கரைக்கு..... அக்கறையோடு.







அன்பு செய்வதில்
தாயாக...  அக்கறை கொள்வதில்
தந்தையாக
ஆறுதல் தருகையில்
சகோதரமாக...  இறுக்கமாக
இருக்கும் எமது நட்பு

ஒரே  ஊரல்ல....  சொந்த
உறவு முறையுமில்லை
ஆனாலும் உறவானோம்
பழகியதாலே
உரிமை எடுத்து ஏசிக்கொண்டோம்
பாசத்தினாலே

காலத்தின் கட்டாயம்
நீ
கடல் கடந்து போக வேண்டும்

பரவாயில்லை
தூரங்களை
வைத்து விடு ஒரு ஓரமாக

அசை போட்டுப் பேசுவதற்கு
எமக்கு இருக்கு ஆயிரம் விசயங்கள்
தொழில் நுட்பம் துணையிருக்கும்
ஒன்றியிருப்போம் நாம்
உணர்வுகளாலே

இந்த பிரிவு
முடிவல்ல.... எம் உறவில்
ஒரு இடைவேளை
தொடர்ந்து பயணப்படு  
உன் வழில்  வழக்கம் போல
வழங்களெல்லாம்  வந்து சேரும்
உனை நெருக்கமாக

எப்போதும் போலவே
இப்போதும்
உன்னை வாழ்த்துகின்றேன்... வழி
அனுப்பி வைக்கிறேன்.

Saturday 18 February 2017

தேவதைகள் தூங்குமிடம்....






இப்பொழுது
தான்
கண்டுகொண்டேன்
தேவதைகள் எல்லாம்
அவர்களின் தந்தையின்
தோழ்களில் தான்
தூங்கிறார்கள்
என்று..........